கட்டுரை எழுதும் கலை

இன்றைய போட்டி பரீட்சைகளில் நுண்ணறிவு மற்றும் பொது அறிவுகளில் தேர்ச்சிப்பெறும் மாணவர்கள் தற்போது மொழித்திறனில் வரக்கூடிய கட்டுரை, சுருக்கம் போன்றவற்றில்  சிரமப்படுகின்றார்கள். இந்நிலையில் கட்டுரை ஒன்றை எவ்வாறு எழுதுவது என இன்று பார்க்கலாம்.
01 கட்டுரை எழுதும் முறை
மாணவர்களே! இப்பகுதியில் கட்டுரை எழுதும் முறை பற்றிக் காண்போம். ஒருவர் தம் உள்ளக் கருத்துகளை வெளியிடும் வாயில்களாக அமைவன, அவர்தம் பேச்சும் எழுத்தும் ஆகும். இவற்றுள் எழுதுதல் என்பது,    தனித்திறன்.    அவ் எழுத்து,  கதையாகவோ,  கட்டுரையாகவோ வெளிப்படலாம். கட்டுரை எழுதும் திறன் பற்றி இங்குக் காண்போம்.
‘ஒரு பொருளைப் பற்றி இலக்கண முறையில் கட்டுரைப்பது கட்டுரை.’ ‘கட்டுரையாவது வகைப்படுத்திக் கூறுதல்.’  உள்ளத்தில் தோன்றுவதைக் கட்டுரைப்பது கட்டுரை.  ‘அழகு நிரம்பிய உரையைக் கட்டுரை என்கிறோம்’. இவ்வாறு, அறிஞர்கள் விளக்கம் தருகின்றனர்.
சுருக்கமாகக் கூறினால், குறிப்பிட்ட ஒரு பொருளைப் பற்றி, ஒரு கட்டுக்கோப்புடன் யாவரையும் ஈர்க்கும் முறையில் அமைக்கப்படுவதைக் ‘கட்டுரை’ எனலாம்.
02 கட்டுரை அமைப்பு
இனி,  கட்டுரையின் அமைப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.  எந்தப் பொருளைப் பற்றிக் கட்டுரை எழுதினாலும் அது, முன்னுரை – பொருளுரை – முடிவுரை ஆகியவற்றைக் கொண்டு விளங்க வேண்டும்.
முன்னுரையும் முடிவுரையும் ஒவ்வொரு பத்திக்குள் அமைய வேண்டும்.
முன்னுரையானது,  எழுதப் புகும் கருத்தை வகுத்துக் காட்டுவதாக இருக்க வேண்டும். முடிவுரையானது சொல்லப்பட்ட கருத்துகளைத் தொகுத்துக் கூறுவதாக அமைய வேண்டும்.  ஒரு கட்டுரையில் முன்னுரையையும் முடிவுரையையும் படித்தாலே கட்டுரையின் சிறப்புத் தன்மை விளங்க வேண்டும்.
பொருளுரையானது, எடுத்துக்கொண்ட கருத்தைப் பல வழிகளில் விளக்கிக் கூறும் பகுதி ஆகும். ஆதலின் அதைப் பல பத்திகளாகப் பிரித்து எழுதுதல் வேண்டும். எடுத்துக்கொள்ளும் பொருளுக்கு ஏற்ப, உள் தலைப்புகள் பலவற்றைக் கொண்டதாகப் பொருளுரை விளங்க வேண்டும்.
கட்டுரையானது,   சுருங்கச்   சொல்லல்,   விளங்க வைத்தல்,   நன்மொழி புணர்த்தல் முதலான அழகுகளைப் பெற்றிருக்க வேண்டும்.   கூறியது கூறல்,   மாறுகொளக் கூறல்,   மற்றொன்று விரித்தல் முதலான குற்றங்கள் இல்லாமல் எழுதப்பட வேண்டும். இனி, கட்டுரை எழுதுவோர் கருத்திற்கொள்ள வேண்டிய சில பொதுவிதிகளைக் காண்போம்.
1. செய்திகளைத் திரட்டுதல்
2. முறைப்படுத்துதல்
3. தலைப்புக் கொடுத்தலும் பத்தி அமைத்தலும்
4. மேற்கோள்கள் – பழமொழிகள் திரட்டுதல்
5. பல்வகை வாக்கியங்களில் எழுதுதல்
6. நடை அழகு
7. நிறுத்தக் குறியீடுகள் பயன்படுத்தி எழுதுதல்
8. நல்ல கருத்துகளை எடுத்தாளும் திறன்
9. மீள் பார்வை செய்தல்
10. நல்ல கையெழுத்தில் எழுதுதல்.
ஆசிரியர் பயிற்சி மாணவர்களே!  கட்டுரை எழுதும்பொழுது இவ்விதிகளை நினைவிற் கொண்டு கட்டுரை எழுதிட முயல்க.
03. கட்டுரை வகை
கட்டுரைகளை, 1. கதை இயல்புக் கட்டுரை, 2. விளக்கக் கட்டுரை, 3. சிந்தனைக் கட்டுரை, 4. வருணனைக் கட்டுரை, 5. கற்பனைக் கட்டுரை, 6. ஆய்வுக் கட்டுரை, 7. வரலாற்றுக் கட்டுரை, 8. தருக்கக் கட்டுரை, 9. அங்கதக் கட்டுரை, 10. பாராட்டுக் கட்டுரை, 11. பத்திரிக்கைக் கட்டுரை என்பனவாகப் பகுத்துக் காட்டுவர்.
மாணவர்களே! கட்டுரை வகை, எழுதுவதற்கான விதிகள், கட்டுரையின் அமைப்பு ஆகியவற்றைத் தெரிந்துகொண்ட நீங்கள்,  நல்ல கட்டுரை எழுதிப் பழகுக!  உம் படைப்பாற்றலையும் எழுத்தாற்றலையும் வெளிப்படுத்துக!

Comments

Popular posts from this blog

TNPSC கணிதம் - தனி வட்டி

ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளை அறிதல்

இரும்பு தொழிற்சாலை பற்றி சில தகவல்கள்